பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை-இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் அநாகரிகமான முறையில், பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இது அதிகார அத்துமீறல் என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகளிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் அநாகரிகமான முறையில், பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இணை இயக்குனரை தொலைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். பா.ஜனதா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது அதிகார அத்துமீறல் என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் வசிப்பவர்கள் அனைவரும் குடும்ப அட்டையை கவுரவத்திற்காகவே வைத்துள்ளனர். ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், பா.ஜனதா தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குடும்ப அட்டை ஒப்படைப்பது மக்களை ஏமாளியாக்கும் செயல்.
பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் ஏழை-எளிய மக்களும், நடுத்தர மக்களும் பொது விநியோக திட்டம் அத்தியாவசியமானதா கும். குடிமை பொருள் வழங்கல் துறையை தன் வசம் வைத்துள்ள பா.ஜனதா பொதுமக்கள் பார்வைக்கு இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவது ஏமாற்று செயலாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.