குடிபோதையில் ரகளை செய்த 5 பேர் கைது
- திருக்கனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
திருக்கனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் 2 வாலிபர்கள் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை மிரட்டி ரகளை செய்வதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான பொம்பூரை அடுத்த இளையாண்டிபட்டு கிராமத்தை சேர்ந்த மோகன்(35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் நெட்டப்பாக்கம் அருக ஏரிப்பாக்கத்தில் சாராயக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த ராகவன் பேட்டையை சேர்ந்த கலைவாணன் (30) மற்றும் மடுகரை-சிறுவந்தாடு சந்திப்பு ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த வளவனூர் அருகே ஆளையாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்(44) ஆகிய 2 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மங்கலத்தில் மதுக்கடை அருகே மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த கிளிஞ்சிக்குப்பம் புதுநகரை சேர்ந்த கடம்பாகுளம்(25) என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.