செய்திகள்
திருப்பதி

திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Published On 2021-04-19 12:27 IST   |   Update On 2021-04-19 12:27:00 IST
ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு 15 ஆயிரம் பக்தர்களே முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதி :

கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோவிலில் கைங்கரியங்கள் தனிமையில் நடத்தப்பட்டன. அதன்பிறகு ஜூன் மாதம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

எனவே தேவஸ்தானம் கடந்த 12-ந்தேதி முதல் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்களை ரத்து செய்தது. தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டு வழங்கப்பட்டு வந்த டோக்கன்களை ரத்து செய்யப்பட்டதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

இந்நிலையில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையையும் பாதியாக தேவஸ்தானம் குறைத்துள்ளது.

ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு 15 ஆயிரம் பக்தர்களே முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நடைமுறை மே மாதம் முதல் 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) இதற்கான விவரங்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 27,822 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,062 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

Similar News