செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-06-29 08:56 IST   |   Update On 2019-06-29 09:17:00 IST
சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 5 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்தவையாகும்.



ஏனெனில் மார்கழி, ஆனி மாதத்தில் நடைபெறும் விழாவில் மூலவராகிய சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியே உற்சவராக புறப்பாடாகி தேரில் வலம் வந்து, மகா அபிஷேகமும், தரிசன நிகழ்வும் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
 
அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித் திருமஞ்சன விழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரி‌‌ஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 

Similar News