உலகம்

புற்றுநோய் வராமல் காப்பது அனைவரின் கடமை - விழிப்புணர்வு தினத்தில் சபதம் ஏற்போம்

Published On 2024-02-04 02:45 GMT   |   Update On 2024-02-04 02:46 GMT
  • விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.
  • குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

உலகம்முழுவதும் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் பலியாகி வருகின்றனர். ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை பரப்புவதும் இதில் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.


 

ஆரம்பநிலையில் இந்த நோயை கண்டறிதலையும் சிகிச்சைகள்மூலம் புற்றுநோயை குணப்படுத்துதலை அதிகரிக்கவும் 2008-ம் ஆண்டு முதல் பிப்- 4 ந்தேதி 'உலக புற்றுநோய் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

புற்றுநோய் இறப்பு விகிதத்தை, புற்றுநோய்த் தாக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், பூங்காக்கள், சமூகக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், தெருக்களிலும் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல முயற்சிகள் உலக புற்றுநோய் நாளில் நடத்தப்படுகின்றன. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு தைரியத்தை ஊட்டுவதற்காக சிகையலங்காரம் செய்பவர்கள் பலர் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர்.

உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறு மற்றும் உடலில் ஏற்படும் பல விளைவுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.


 

போதை பாக்குகள், புகையிலை, சிகரெட், மதுப்பழக்கத்தை கைவிட்டு புற்றுநோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதனால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். புற்றுநோய் வராமல் காப்பது நம் அனைவரது கடமை ஆகும்.

புற்றுநோயைத் தடுப்பது மற்றும் கண்டறிதல், சிகிச்சையில் பிரமிக்க தக்க வகையிலான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக புற்றுநோய் தினத்தின் 'கருப்பொருள்' புற்றுநோய்க்கு முன்னுரிமை அளிப்பதாகும். புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

Tags:    

Similar News