உலகம்

நிலநடுக்கத்திற்குப் பிறகு 5 மீட்டர் நகர்ந்த துருக்கி- அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Published On 2023-02-09 17:24 IST   |   Update On 2023-02-09 17:24:00 IST
  • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
  • அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

இஸ்தான்புல்:

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நிலநடுக்க அறிவியலாளர்களில் ஒருவரான இத்தாலிய நாட்டு விஞ்ஞானியான பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறும்போது, டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி அமைந்து உள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என கூறியுள்ளார்.

இது அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதில், குறிப்பிடும்படியாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்து உள்ளன. இதில் ஏற்பட்ட அதிர்வில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவிலான நிலநடுக்கம் உருவாகி உள்ளது.

அனடோலியன், அராபிக்கா, யுரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய 4 தட்டுகள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் டாக்லியோனி கூறியுள்ளார். 

Tags:    

Similar News