உலகம்

இலங்கையில் 100 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிபர் மாளிகை செயல்பட தொடங்கியது

Published On 2022-07-25 15:52 IST   |   Update On 2022-07-25 15:52:00 IST
  • அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது.

கொழும்பு:

நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில குதித்தனர்.

அதிபர் மாளிகை அருகே பொதுமக்கள் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் உச்சகட்டமாக கடந்த 9-ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.

அங்கு சில நாட்கள் தங்கியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றவுடன் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதிபர் மாளிகை அருகே முகாம் அமைத்து போராட்டம் நடத்தியவர்களை ராணுவத்தினர் அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர்கள் அமைத்து இருந்த கூடாரங்களை பிரித்து எறிந்தனர்.

பின்னர் அதிபர் மாளிகையை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது. மேலும் அதனை சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடந்தது

தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் முதல் அதிபர் மாளிகை இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல பணிகள் நடந்தது.

இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இலங்கையில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகள் இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News