மலேசியாவில் பொதுத் தேர்தல்- மீண்டும் போட்டியிடும் 97 வயது மகாதீர் முகமது
- அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
- எங்கள் கூட்டணி கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை.
மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார். அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார்.
அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார்.
இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக 97 வயதாகும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.
தான் லங்காவி தீவு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். மேலும் எங்கள் கூட்டணி கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமர் வேட்பாளர் பற்றி கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.