உலகம்

பாகிஸ்தானில் இந்து டாக்டர் சுட்டுக்கொலை

Published On 2023-03-31 08:35 GMT   |   Update On 2023-03-31 08:35 GMT
  • பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
  • பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கராச்சி:

பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் டாக்டரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார்.

நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன் கிளினிக்கில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவரும் சென்றார்.

கராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த டாக்டர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் காரில் பயணம் செய்த பெண் டாக்டர் உடலிலும் குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் காரில் உயிருக்கு போராடினார்.

இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்த பெண் டாக்டரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரிடம் அவர் கூறும் போது, எங்களை நோக்கி யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என்ன என்பதை அறிவதற்குள் என் மீது குண்டு பாய்ந்து விட்டதால் என்னால் எதையும் அறிய முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்து இருக்கலாமா?என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தப்பிஓடிய மர்ம மனிதர்களை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News