இலங்கைக்கு மேலும் கடன் வழங்க சீனா தயக்கம்
- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் சீனாவிடம் இருந்து 2 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது.
- இலங்கைக்கு கூடுதல் கடனுதவி அளிப்பது குறித்தோ, கடன் மறு சீரமைப்பு குறித்தோ நேரடியாக கருத்து தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.
கொழும்பு:
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் சீனாவிடம் இருந்து 2 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.15 ஆயிரத்து 995 கோடி ஆகும்.
கடந்த சில ஆண்டுகளில் சீனா, இலங்கையில் மேற்கொண்ட முதலீடுகளையும், கடனையும் கணக்கிட்டால் ஒட்டுமொத்தமாக 8 பில்லியன் டாலர் ஆகிறது.
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார மந்த நிலை நீடிப்பதால் கடனை மறுசீரமைப்பு செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை வைத்தது.
இதையடுத்து இலங்கை நிதி மந்திரியை சீனா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைக்கு சீன வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வுகாண தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும் இலங்கைக்கு கூடுதல் கடனுதவி அளிப்பது குறித்தோ, கடன் மறு சீரமைப்பு குறித்தோ நேரடியாக கருத்து தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.
இதுகுறித்து சீன அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'கடனை மறு சீரமைப்பது தொடர்பாக இலங்கை நிதி அமைச்சகத்துக்கு ஏற்கனவே தீர்மானம் அனுப்பி உள்ளோம். அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.
மேலும் சர்வதேச நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை முதலில் நிறைவு செய்யுமாறு இலங்கையிடம் வலியுறுத்தினோம்' என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி சீனாவின் மொத்த கடன் 6.2 பில்லியன் டாலர் என சர்வதேச நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. இதில் சீனாவும், ஜப்பானும், இலங்கைக்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன.