மும்பை வெடிகுண்டு தாக்குதல் - முக்கிய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை
- மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தியது.
- மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித்தை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டதால் சஜித்திற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சஜித் மிர் சிறையில் அடைக்கப்பட்டான்.