உலகம்

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்

Published On 2025-05-18 11:10 IST   |   Update On 2025-05-18 11:10:00 IST
  • பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.
  • விபத்தில் கப்பலில் இருந்த 19 பேர் காயம் அடைந்தனர்.

நியூயார்க்:

மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.

அந்த கடற்படை பாய் மரக் கப்பல் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்றது. அங்குள்ள புரூக்ளின் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. அப்போது கப்பலின் கம்பங்கள், புரூக்ளின் பாலத்தில் மோதியது. பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.



இந்த விபத்தில் கப்பலில் இருந்த 19 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மெக்சிகோ கடற்படை கூறும்போது, பயிற்சி கப்பலான குவாக்டேமோக், புரூக்ளின் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. இதனால் அதன் பயணத்தை தொடர முடியவில்லை. பணியாளர்கள் மற்றும் பொருட்களின் நிலை கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.


மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, அமெரிக்காவிற்கான தூதரும் நியூயார்க்கில் உள்ள மெக்சிகோ துணைத் தூதரக அதிகாரிகளும் "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தது. இந்த விபத்தில் 142 ஆண்டுகள் பழமையான புரூக்ளின் பாலத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News