உலகம்

அடுத்த மாதம் விண்வெளியில் பயணிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு

Published On 2024-05-23 12:00 GMT   |   Update On 2024-05-23 12:00 GMT
  • கடந்த 7-ம் தேதி சுனிதா செல்ல இருந்த விண்வெளி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
  • தற்போது 3-வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வாஷிங்டன்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.

இதனையடுத்து அங்கு விண்வெளிக்குச் சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன்மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையே, 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ், புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்கலம் கடந்த 7ம் தேதி அனுப்பப்பட இருந்தது. ஆனால் அவர்களது விண்வெளி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி பகல் 12.25 மணிக்கு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், 2,5,6 ஆகியவை மாற்றுத் தேதிகளையும் அறிவித்துள்ளது.

விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News