உலகம்

சீன கட்டுமான நிறுவனத்தை முடக்க ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-01-29 06:55 GMT   |   Update On 2024-01-29 08:30 GMT
  • விலைவாசி உயர்வால் தம்பதியினர் குழந்தைகள் பெற்று கொள்வதை தவிர்க்கின்றனர்
  • எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $300 பில்லியன் அளவிற்கு கடன் உள்ளது

சீனாவை சேர்ந்த மிக பெரிய கட்டுமான நிறுவனம், எவர்கிராண்டே (Evergrande).

எவர்கிராண்டே, சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அபார்ட்மென்ட் மற்றும் வணிக வளாகங்களை பெருமளவில் கட்டி விற்பனை செய்து வந்தது.

கடந்த சில வருடங்களாக சீனாவில் விலைவாசி அதிகரிப்பால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கான செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதாகவும், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை தள்ளி போடுவதுடன், தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.

பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டது. இதன் தாக்கம் எவர்கிராண்டே நிறுவன வருவாயில் எதிரொலித்தது.

கடந்த 2021ல் எவர்கிராண்டே வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $240 பில்லியன் மதிப்பிற்கு சொத்துக்களும், $300 பில்லியன் மதிப்பிற்கு கடனும் உள்ளது.

இந்நிலையில், 2022ல், அந்நிறுவனத்தில் பெருமளவு பணம் முதலீடு செய்திருந்த டாப் ஷைன் குளோபல் எனும் நிறுவனத்தின் மனுவை விசாரித்த ஹாங்காங் நாட்டின் நீதிமன்றம், எவர்கிராண்டே நிறுவனத்தை மூடப்பட்டதாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கி, கடனை ஈடு கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

இதை தொடர்ந்து ஹாங்காங் பங்கு சந்தையில் எவர்கிராண்டே வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டது.

கடன் வழங்கியவர்களுக்கு நிவாரணத்திற்காக ஹாங்காங் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீன நீதிமன்றங்கள் செயல்படுத்த அனுமதிக்குமா என்பது சந்தேகம் என்றும், இத்தீர்ப்பின் தாக்கம் ஏற்கெனவே நலிவடைந்துள்ள சீன பொருளாதாரத்தில் கடுமையாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News