பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்... ராணுவ நிலைகள் மீது தாக்குதல்
- ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
- நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தலிபான் இஸ்லாமிய எமிரேட் படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 நாட்டின் எல்லைக் கோட்டின் குறுக்கே 2 பாகிஸ்தானிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையேயான இந்த தாக்குதல் சம்பவம் இரு நாட்டிற்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.