உலகம்

விருந்தில் குத்தாட்டம்: பின்லாந்து பெண் பிரதமர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை- பரிசோதனையில் தகவல்

Published On 2022-08-23 06:18 GMT   |   Update On 2022-08-23 13:16 GMT
  • தான் போதை பொருளை பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
  • பிரதமர் சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.

ஷெல்சின்கி:

பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

இதற்கிடையே சன்னா மரின் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சன்னா மரின் உற்சாகமாக பாடி, நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதில் அவர் போதை பொருளை உட்கொண்டு குத்தாட்டம் போட்டதாக விமர்சனம் எழுந்தது. அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சியினர் பதவி விலக வலியுறுத்தினர். இதற்கு விளக்கமளித்த சன்னா மரின், தான் எந்த போதை பொருளையும் பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், போதை பொருள் தொடர்பான சோதனைக்கு தயார் என்றும் அறிவித்தார். இதையடுத்து சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் போதை மருந்து சோதனைகள் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் சன்னா மரின் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்று தெரியவந்தது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் சன்னா மரினிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சன்னா மரினின் பிரதமர் பதவி தப்பியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா மரின் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News