உலகம்

போன் உரையாடல் கசிவு: தாய்லாந்து பெண் பிரதமரை சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-07-01 14:46 IST   |   Update On 2025-07-01 14:46:00 IST
  • கம்போடியா தலைவருடன் பேசிய போன் உரையாடல் கசிந்து பிரச்சினை ஏற்பட்டது.
  • ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.

இது தொடர்பான உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தற்போதைய தொலைபேசி உரையாடல் எதிரொலியாக பிரதமருக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது.

இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஷினவத்ரா கூறுகையில் "பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.

நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News