உலகம்

விளையாட்டாக கட்டி அணைத்ததில் விலா எலும்பு உடைந்தது: நண்பர் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண்

Published On 2022-08-18 16:01 GMT   |   Update On 2022-08-18 16:01 GMT
  • விலா எலும்புகள் உடைந்ததால் இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.
  • கட்டிப் பிடித்ததால் தான் இப்படி ஆனது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என நண்பர் கேட்டதால் நீதிமன்றத்தை நாடினார்

பீஜிங்:

அன்பு மிகுதியால் கட்டியணைப்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் சரியான நபரிடமிருந்து சரியான சமயத்தில் அந்த அரவணைப்பை பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால், அதுவே விலா எலும்புகளை உடைக்கும் அளவுக்கு முரட்டு அணைப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய வலி நிறைந்த அனுபவத்தை பெற்றுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்.

சீனாவின் ஹுனான் மாகாணம், யுயாங் நகரைச் சேர்ந்த அந்தப் பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்.

தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால் தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது?" எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்து விட்டார்.

அதையடுத்து இளம்பெண் கோர்ட்டை நாடியிருக்கிறார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், ``மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்த அந்த 5 நாட்களில் எலும்பு முறிவு ஏற்படக் கூடிய எந்தச் செயலிலும் அந்தப் பெண் ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News