உலகம்

வாடிகனில் நடந்த முதல் வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வாகவில்லை- கரும்புகை வெளியேற்றம்

Published On 2025-05-08 12:17 IST   |   Update On 2025-05-08 12:17:00 IST
  • 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
  • ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.

புதிய போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் வரை கார்டினல்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே சிறப்பு திருப்பலி நடந்த பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு (89 வாக்குகள்) பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.

போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

இன்று 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

Tags:    

Similar News