உலகம்
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு
- உணவுக்காக காத்திருக்கும் காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்
- உணவகத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே உணவுக்காக காத்திருக்கும் காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் காசா நகரில் உள்ள அல்-பக்கா கபே உணவகத்தில் உணவுக்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் காத்திருந்தனர். அப்போது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 23 பேர் பலியானார்கள். அதேபோல் தெற்கு காசாவில் உணவு தேடி வந்த 11 பேரை இஸ்ரேலிய படைகள் கொன்றதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 74 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.