செய்திகள்
அலெக்ஸி நவல்னி

கோமா நிலையில் உள்ள ரஷிய எதிர்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி

Published On 2020-08-21 22:02 GMT   |   Update On 2020-08-21 22:02 GMT
விஷம் கலந்த டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்ற ரஷிய எதிர்க்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்ல புதின் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.

நவல்னி நேற்று முன்தினம் ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது 
நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளத்திலேயே ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் கோமா நிலைக்கு 
சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நவல்னி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிரா யார்ம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

நவல்னி காலை முதல் எந்த உணவும் சாப்பிடவில்லை. விமான நிலையத்தில் வைத்து டீ (தேனீர்) மட்டுமே குடித்தார். அவர் குடித்த டீ-யில் தான் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என கிரா தெரிவித்தார்.

நவல்னி குடித்த டீ-யில் விஷம் கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என ரஷிய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், நவல்னியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. மேலும், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றதையடுத்து நவல்னிக்கு மேல் சிகிச்சை அளிக்க ஜெர்மனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தது. இதற்காக கோமா சிகிச்சை அளிக்கும் அடங்கிய மருத்துவக்குழு ஒன்று தனி விமானம் மூலம் ரஷியா அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நவல்னியை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க மருத்துவமனையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், நவல்னியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி வெளிநாட்டிற்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால், வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதி தரும்படி அதிபர் விளாமிர் புதின் அரசு நிர்வாகத்திடம் நவல்னி குடும்பம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு புதின் நிர்வாகம்
அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தற்போது நவல்னியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியையடுத்து விஷம் கலக்கப்பட்ட டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ள ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னி கூடிய விரைவில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷியாவில் நவல்னியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஜெர்மனிக்கு கொண்டு செல்வதாக நவல்னியின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News