செய்திகள்
பாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா
பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜபர் மிர்சாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 818 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு இதுவரை 4 ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் இலக்காகி வருகின்றனர்.
பாகிஸ்தானிலும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் சுகாதாரத்துறை மந்திரி தற்போது கொரோனாவுக்கு இலக்காகி உள்ளார்.
அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரியான ஜபர் மிர்சா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தனக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் உள்ளதாகவும், இதனால் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாகிஸ்தான் மக்களிடையே வைரஸ் தொடர்பாக மிகுந்த அச்சம் நிலவி வருகிறது.