செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் பயணம் செய்த கார் விபத்து
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் செய்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிரதமர் உள்பட யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று சில குழுக்கள் போராட்டம் நடத்தின. குர்திஷ் ஆதரவு குழுக்கள், பிரக்சிட் எதிர்ப்பு குழுக்கள் என பல தரப்பினரும் குறைவான பங்கேற்பாளர்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் பாராளுமன்றம் வந்திருந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்குள்ள பணிகளை முடித்துக்கொண்டு டவுன் ஸ்டிரிட்டில் உள்ள தனது பிரதமர் அலுவலகத்திற்கு
காரில் புறப்பட்டார்.
பிரதமர் ஜான்சனின் கார் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் பிரதமரின் காரை வேகமாக சென்று இடைமறித்தார்.
போராட்டக்காரர் திடீரென காரின் முன் வந்து நின்றதால் பிரதமரின் கார் டிரைவர் வேகமாக பிரேக்கை மிதித்தார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் வாகனம் எதிர்பாராத விதமாக பிரதமரின் கார் மீது வேகமாக மோதியது.
இந்த மோதலில் ஜான்சன் பயணித்த காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் சென்ற காரை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த அந்த போராட்டக்காரரை கைது செய்தனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.