செய்திகள்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ஊரடங்கு மே 4-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2020-04-26 09:46 GMT   |   Update On 2020-04-26 09:46 GMT
இலங்கையில் மே 4-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
கொழும்பு:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியதால், அங்கு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 27-ந் தேதி வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவர அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் திடீரென புதிதாக 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானதால் ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.



இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி 27-ந்தேதி (நாளை) மாலை 5 மணி முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படும் என இலங்கை போலீசார் அறிவித்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்துக்குள்ளாக, இலங்கையில் மே 4-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கொழும்பு, காம்பகா, கலுதரா மற்றும் புத்தலம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், மற்ற மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400-ஐ தாண்டிவிட்டது. இந்த வைரஸ் பிடியில் சிக்கி அங்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News