செய்திகள்

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் தொடர்பா? - இலங்கையில் தமிழ் ஆசிரியர் கைது

Published On 2019-04-28 12:02 GMT   |   Update On 2019-04-28 12:02 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் 106 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #SriLankabombings
கொழும்பு:

இந்தியாவின் அருகாமையில் உள்ள தீவுநாடான இலங்கையில் வாழும் சுமார் 21 லட்சம் மக்களில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். அதற்கடுத்தபடியாக இந்து மக்கள் பரவலாக வாழும் அந்நாட்டில் சுமார் 10 சதவீதம் அளவுக்கு இஸ்லாமியர்களும், 7 சதவீதம் அளவுக்கு கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரமாக சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த வீட்டை அதிரடிப் படை வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் உள்ளே இருந்துகொண்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையின்போது வீட்டினுள் திடீரென குண்டு வெடித்து சிதறியது. குண்டுவெடித்ததில் வீட்டிற்குள் இருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.



இந்த தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் இதுவரை 106 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவ்வகையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தமிழ் ஆசிரியர் ஒருவரும் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 50 சிம் கார்டுகளை கைப்பற்றிய கல்பிட்டியா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு டாக்டரும் கைதானதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SriLankabombings #Colombobombings #Easterbombings #Tamilmediumteacher
Tags:    

Similar News