செய்திகள்

வெனிசுலாவில் தற்காலிக அதிபராக அறிவித்த கெய்டோ நாட்டை விட்டு செல்ல தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-01-30 07:04 GMT   |   Update On 2019-01-30 07:04 GMT
வெனிசுலாவில் அமெரிக்கா ஆதரவு பெற்ற பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, நாட்டை விட்டு செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #VenezuelaCrisis #NickolasMaduro #JuanGuaido
கராகஸ்:

வெனிசுலாவில் கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இம்மாதத் தொடக்கத்தில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, அங்கீகரித்துள்ளன. அத்துடன், அதிபர் நிகோலஸ் மதுரோ தன்னிடம் உள்ள அதிகாரத்தை ஜூவான் கெய்டோவிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ஜூவான் கெய்டோவின் நியமனத்தை அதிபர் மதுரோ ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் அமெரிக்காவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

அதேசமயம், வெளிநாடுகளின் ஆதரவுடன் தற்காலிக அதிபராக அறிவித்த கெய்டோவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தாரிக் சாப் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ஜூவான் கெய்டோவுக்கோ அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, நாட்டை விட்டு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

கெய்டோவின் பயணத்திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும், அவரது வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக்கொண்ட சில மணி நேரங்களில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கெய்டோவுக்கு எதிராக குற்ற விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், என்ன குற்றம் என்பது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவில்லை. #VenezuelaCrisis #NickolasMaduro #JuanGuaido
Tags:    

Similar News