செய்திகள்

நைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சல்- 16 பேர் பலி

Published On 2019-01-23 04:20 GMT   |   Update On 2019-01-23 04:20 GMT
நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். #NigeriaLassafever
லாகோஸ்:

உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல்  கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரைக் கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.

நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது  26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான  நடவடிக்கைகள் நைஜீரிய சுகாதார அதிகாரிகள்,  உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.

லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  #NigeriaLassafever 
Tags:    

Similar News