செய்திகள்

ஆப்கானிஸ்தான் போராட்டக் களத்தில் தற்கொலை தாக்குதல் - உயிரிழப்பு 68 ஆக உயர்ந்தது

Published On 2018-09-12 06:31 GMT   |   Update On 2018-09-12 06:31 GMT
ஆப்கானிஸ்தானில் போராட்டக் களத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. #AfganistanAttack
காபூல்:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மொமதாரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியான பிலால் பாட்சா என்பவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜலாலாபாத்- டோர்காம் பிரதான சாலையில் போராட்டம் நடைபெற்றபோது, போராட்டக்காரர்களுடன் சென்ற ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.



இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,  ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு  68 ஆக உயர்ந்தது. 128 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவலை நங்கர்ஹார் பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதலை தலிபான் அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அனால், தாக்குதல் நடத்தவில்லை என தலிபான் மறுத்துள்ளது.  #AfganistanAttack 
Tags:    

Similar News