செய்திகள்

சவூதி கூட்டுப்படைகள் தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 46 பேர் கொன்று குவிப்பு

Published On 2018-08-13 03:15 IST   |   Update On 2018-08-13 03:15:00 IST
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவூதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
சனா:

ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவூதி கூட்டுப்படைகள் களம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவூதி அரேபியா மீது தீராப்பகையை உண்டாக்கி உள்ளது. இதனால் சமீப காலமாக சவூதி அரேபிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவூதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதல்கள் துஹாயத், ஜபித், எல் உசேனியா மாவட்ட பகுதிகளில் நடந்து உள்ளன.

மேலும் சவூதி கூட்டுப்படைகளின் உதவியுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அல் தஹார் மாவட்டத்தில் சில பகுதிகளை ஏமன் படைகள் மீட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
Tags:    

Similar News