செய்திகள்
அல்பேனியாவில் கொடூரம் - குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டுக் கொன்ற நபருக்கு வலைவீச்சு
அல்பேனியாவில் குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரி சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டிரானா:
ஐரோப்பாவின் பால்கன் தீவுகளில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. இந்த நாட்டின் தலைநகராக விளங்குவது டிரானா.
டிரானா நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் ரித்வான் சைகாஜ் (24).
இவர் நேற்று தனது வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்த கொலைகள் தொடர்பான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்றது அல்பேனியாவில் சோகத்தை ஏற்படுத்தியது.