செய்திகள்

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் மந்திரி விஜயகலா ராஜினாமா

Published On 2018-07-06 06:38 GMT   |   Update On 2018-07-06 06:38 GMT
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை குழந்தைகள் நலத்துறை ராஜாங்க மந்திரி விஜயகலா ராஜினாமா செய்தார். #VijayakalaMaheswaran
கொழும்பு:

இலங்கையில் குழந்தைகள் நலத்துறை ராஜாங்க மந்திரி ஆக இருந்தவர் விஜயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த இவர் யாழ்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது வடக்கு பகுதியில் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். 59 வயது பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கொள்ளையும் நடந்துள்ளது. அரிவாள் வெட்டு சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

ஆனால் நடவடிக்கை இல்லை. அவற்றை பார்க்கும் போது விடுதலை புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் விடுதலைப் புலிகள் காலத்தில் இல்லை. மக்கள் பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக வேண்டும்’ என்றார்.

அவரது இந்த பேச்சு இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் சிங்களர்கள் அதிகம் வாழும் தெற்கு பகுதியிலும் விஜயகலா மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அவர் மந்திரி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே மற்றும் அவரது ஐக்கிய தேசிய கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

அதை ஏற்று நேற்று அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதுகுறித்து பேட்டி அளித்த அவர், ‘‘மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கிற போது நாம் எதையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால் தான் மக்களின் துன்பங்களை எடுத்துக் கூற முயன்றேன்.

இதனால் தென் பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் எனது மந்திரி பதவியை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்து இருக்கிறேன்’’ என்றார். இவரது கணவர் டி.மகேஸ்வரனும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். எம்.பி. மற்றும் மந்திரி ஆக இருந்த அவர் 2008-ம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார். #VijayakalaMaheswaran
Tags:    

Similar News