செய்திகள்

லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க விதிக்கப்பட்ட தடை ரத்து

Published On 2018-06-26 17:41 GMT   |   Update On 2018-06-26 17:41 GMT
லண்டன் நகரில் உபேர் நிறுவனம் இயங்க விதிப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டு, மேற்கொண்டு 15 மாதங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Uber #UberinLondon

லண்டன்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இயங்குவதற்காக அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்று உரிமம் பெற வேண்டும். 

லண்டனில் இந்நிறுவனத்தின் உரிமம் வருகிற கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து, அந்த உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை துறை மறுப்பு தெரிவித்தது. உபேரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது அந்நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது. மேலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை எனவும் காரணம் கூறியது. இதையடுத்து லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, உபேர் நிறுவனம் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சரிசெய்துவிட்டதாகவும், அணுகுமுறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உபேர் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது உபேர் நிறுவனம் லண்டனில் இயங்க அந்நாட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை துறை விதித்த தடையை நீதிபதி ரத்து செய்தார். மேலும், இன்னும் 15 மாதங்கள் லண்டனில் இயங்க உபேர் நிறுவனத்துக்கு அனுமது வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #Uber #UberinLondon
Tags:    

Similar News