செய்திகள்

ஜாதவ் தூக்கு தண்டனையை எதிர்த்து இந்தியா ‘அப்பீல்’

Published On 2017-04-15 12:13 GMT   |   Update On 2017-04-15 12:13 GMT
இந்திய கடற்படை அதிகாரி ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை எதிர்த்து இந்தியா ‘அப்பீல்’ செய்கிறது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே நேற்று பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜூவாவை சந்தித்து பேசினார்.

அப்போது குல்பூ‌ஷண் ஜாதவுக்கு தூதரக உதவி அளிக்க அனுமதி கோரினார். மேலும் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை நகல் மற்றும் தூக்குதண்டனை தீர்ப்பின் நகலையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“ குல்பூ‌ஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் இந்தியா நிச்சயம் அப்பீல் செய்யும். மேலும் மரண தண்டனைக்கான தீர்ப்பு நகலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நகல்களும் கேட்டு இருக்கிறோம்.

ஜாதவுக்கு தூதரக உதவி அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 13 தடவை இக்கோரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் தற்போதும் அவருக்கு தூதர உதவி அளிக்க வெளியுறவு செயலாளரிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் மேல்முறையீடு செய்ய முடியும்”என்றார். 

ஆனால் ஜாதவ் விவவாரத்தில் தூதரக உதவி அனுமதி கேட்க முடியாது, ஏனெனில் இது உளவு பார்த்த வழக்கு என பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் தெக்மினா கூறினார்.

இதை இந்திய தூதர் பம்பாவாலே மறுத்தார். இது சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டது, அதை பாகிஸ்தான் மறுக்க முடியாது என்றார்.

Similar News