செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Published On 2017-02-14 07:47 GMT   |   Update On 2017-02-14 07:47 GMT
பாகிஸ்தான் சட்டசபை முன்பு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 13 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மருந்து சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து தயாரிப்பாளர்கள் லாகூரில் உள்ள பஞ்சாப் மாகாண சட்டசபை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளுடன் போராட்டக்காரர்கள் கும்பலுக்குள் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். அப்போது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இத்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 73 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் 5 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர். அவர்களில் போக்குவரத்து போலீஸ் தலைமை அதிகாரி அகமது மொபீன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஷாகித் கோன்டல் குறிப்பிடத்தக்கவர்கள்.

காயம் அடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இத்தாக்குதலுக்கு ஜமாத்-வுர்-அக்ரகர் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அது தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையது.

தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் செரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 27-ந் தேதி லாகூர் குல்ஷான்- இ-இக்பால் பூங்காவில் நடந்த தாக்குதலில் 75 பேர் பலியாகினர். இதற்கு தற்போது தாக்குதல் நடத்தியுள்ள ஜமாத்-வுர்-அக்ரகர் அமைப்பே பொறுப்பு ஏற்று இருந்தது.

Similar News