செய்திகள்

நாய் கறி திருவிழாவில் இருந்து தப்பிக்க 110 சீன நாய்கள் கனடாவில் தஞ்சம்

Published On 2016-12-26 06:16 GMT   |   Update On 2016-12-26 06:16 GMT
நாய் கறி திருவிழாவில் இருந்து தப்பிக்க 110 சீன நாய்களை கனடாவின் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றது.
டொரண்டோ:

சீனாவில் யுலின் மாகாணத்தில் ஆண்டு தோறும் டிசம்பரில் நாய் கறி திருவிழா நடைபெறுகிறது.

அன்று நாய் கறி சாப்பிட்டும், மது அருந்தியும் பொழுதை பொதுமக்கள் குதூகலமாக கழிப்பார்கள். இதன் மூலம் குளிர்காலம் தங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதாக நம்புகின்றனர்.

திருவிழா அன்று சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சி விற்கப்படுகிறது. இதற்கு சமூக நல ஆர்வலர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதை தொடர்ந்து கனடாவில் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

அந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் யுலின் பகுதிக்கு சென்றனர். அங்கு 110 நாய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவற்றுக்கு தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கையின் மூலம் அந்த நாய்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இனி அவை கனடாவில் சுதந்திரமாக வளரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News