செய்திகள்

ஜோர்டானில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொலை: போலீசார் உள்பட 10 பேர் உயிரிழப்பு

Published On 2016-12-19 11:43 GMT   |   Update On 2016-12-19 11:43 GMT
ஜோர்டானில் திடீரென புகுந்து தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டையின்போது போலீஸ் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
அம்மான்:

ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து 120 கி.மீ தொலைவில் கராக் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அரண்மனையும், கோட்டையும் உள்ளது. அதை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி அந்த அரண்மனை கோட்டைக்குள் சில அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் சுட்டனர் அதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இச்சண்டை பல மணி நேரம் நடந்தது. அப்போது உள்ளே சிக்கியிருந்த 10 சுற்றுலா பயணிகளை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர். இருந்தும் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 7 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் கனடாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும், பொதுமக்களில் 2 பேரும் பலியாகினர். 15 போலீசார் உள்பட 34 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் சண்டை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News