செய்திகள்

வீடியோ: ஜப்பானில் இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட்

Published On 2017-08-27 13:36 IST   |   Update On 2017-08-27 13:36:00 IST
ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில், புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்யும் ரோபோட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டோக்கியோ:

டோக்கியோ சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சி இந்த ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி இம்முறை ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடத்தப்பட்டது.

இந்த கண்காட்சியில் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்கள், இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் கண்காட்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு இறுதிச் சடங்கு தொழில்முறை பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டன. 

அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜப்பான் நாட்டின் சாஃப்ட்பேங்க் எனும் நிறுவனம் தயாரித்த பெப்பர் ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.



தற்சமயம் இறுதிச் சடங்கு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், ஜப்பானை சேர்ந்த நிசெய் இகோ புத்த மத குரு இல்லாத நேரங்களிலும், மனிதர்களால் இறுதிச் சடங்கு செய்வோரை அணுகமுடியாமல் போகும் பட்சத்திலும் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இறுதிச் சடங்கு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

இயந்திரம் மற்றும் மென்பொருள் மூலம் மனிதன் உருவாக்கிய ரோபோட் கொண்டு மரணித்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் முறை கேட்க விசித்திரமாக இருந்தாலும், ஜப்பான் நாட்டில் குழந்தைகளை விட பெரியவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் ரோபோட் மூலம் இறுதிச் சடங்கு செய்யும் முறை சாதாரண நிகழ்வாக மாறிவிடும் என்றே கூறப்படுகிறது.

இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட் வீடியோவினை கீழே காணலாம்..,

Similar News