தமிழ்நாடு செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மின்கம்பியில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு

Published On 2025-10-29 11:37 IST   |   Update On 2025-10-29 11:37:00 IST
  • யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது.
  • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காட்டு வனப்பகுதியையொட்டி திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

நிலத்தையொட்டி, வனத்துறை சார்பில் யானைகள் நுழையாமல் இருக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 20 வயது ஆண் காட்டு யானை ஒன்று இந்த அகழியை கடக்க முயன்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக யானை அகழியின் இடுக்கி சிக்கி, அதன் கால்கள் அகழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் யானையால் வெளியே மீண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது. அப்போது தோட்டத்திற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சிக்கிய மின்கம்பிகளுடன் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது.

இதை பார்த்த திருமலை ராஜ் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கு வனத்துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி அதன் பின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News