தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-09-05 10:20 IST   |   Update On 2025-09-05 10:20:00 IST
  • அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
  • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

கர்நாடகாவில் தென்மே ற்கு பருவமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 10 மணி முதல் மீண்டும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News