தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜிக்கு ஜாமீன்

Published On 2025-10-15 18:34 IST   |   Update On 2025-10-15 18:46:00 IST
  • கரூர் கூட்டல் நெரிசல் விவகாரத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
  • த.வெ.க. மாவட்ட நிர்வாகி பவுன்ராஜியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை கைது செய்தனர்.

மதியழகன் மற்றும் பவுன்ராஜை போலீசார் கடந்த மாதம் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரும் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று நீதிமன்ற காவல் முடிவடைந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருவரும் காவல் நீட்டிப்பு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News