குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
- இன்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.
- வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணிகளும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று முதல் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் தடை நீடிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.
இதனால் தடை விதிக்கப்பட்டிருந்த பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்த நிலையில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணிகளும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்த ஆண்டிற்கான குற்றால சாரல் திருவிழா அடுத்த மாதம் நடத்தப்படு வதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. சாரல் திருவிழா தொடங்கப்படும் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.