குற்றால அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிகள் மற்றும் குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய தடையானது இன்று காலை வரை 3-வது நாளாக நீடிக்கிறது.
இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மீண்டும் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று பழைய குற்றால அருவி பகுதியில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பழைய குற்றால அருவியை திறந்து வைத்ததற்கான கல்வெட்டு நிறுவப்பட்டிருந்ததை வனத்துறையினர் அப்புறப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை அடுத்து அங்கு தென்காசி எம்.எல்.ஏ.வும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கல்வெட்டுகள் எதுவும் அகற்றப்படவில்லை என வனத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவருடன் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.