தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபை கூடியது - கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம்

Published On 2025-10-14 09:55 IST   |   Update On 2025-10-14 09:55:00 IST
  • சட்டசபை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
  • இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடியது.

சட்டசபை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், ராமலிங்கம், கலுலுர் ரஹ்மான், சின்னசாமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News