தமிழ்நாடு செய்திகள்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2025-07-07 11:20 IST   |   Update On 2025-07-07 11:20:00 IST
  • சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.
  • இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலில் விநாயகர், முருகர், நடராஜர், அகோர மூர்த்தி, புதன், சுவேத மகாகாளி மற்றும் சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சந்திர, சூரிய மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் 3 குளங்களும் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

முன்னதாக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முறையே நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர், இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், தமிழ் சங்க தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' எனும் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும், திருவெண்காடு ஊராட்சி சார்பில் 4 வீதிகளிலும் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக கழிவறை வசதியும், சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுவினர்கள் முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டு இருந்தன.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

Tags:    

Similar News