தமிழ்நாடு செய்திகள்
கோவில் அறங்காவலராக நியமிக்கப்பட்ட நர்க்கீஸ்கான்: வதந்தி பரப்பிய விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது
- கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
- இது தவறான தகவல் என்று நர்க்கீஸ்கான் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார்.
தஞ்சை மாவட்டம் ரெகுநாதபுரம் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.
இது தவறான தகவல் என்று நர்க்கீஸ்கான் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார். அதில், தான் ஒரு இஸ்லாமியர் இல்லை எனவும், தான் பிறக்கும் போது பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை தாயார் தமக்கு சூட்டியதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இந்நிலையில், இந்து கோயிலில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நர்க்கீஸ்கானை நியமித்துள்ளதாக தவறான தகவலைப் பதிவிட்ட விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவணகார்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். கோயில் அறங்காவலர் நர்க்கீஸ்கான் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.