தமிழ்நாடு செய்திகள்

கைதான சங்கர் சர்கார்


சைபர் அடிமைகளாக மாற்றும் கும்பலின் முக்கிய குற்றவாளி கொல்கத்தாவில் கைது

Published On 2024-12-08 13:46 IST   |   Update On 2024-12-08 13:46:00 IST
  • பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

சென்னை:

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை சைபர் அடிமைகளாக மாற்றும் சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த அப்துல்காதர், சையது ஆகியோரது மூலமாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர் 9 பேரை லாவோஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதுபோன்று வேலைக்கு சேர்ந்தவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டு தவித்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் சேலம் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அப்துல் காதர், சையது ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கர் சர்காரை பிடிக்க போலீசார் வலை விரித்தனர்.

இது தொடர்பாக விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து சங்கர் சர்கார் கைது செய்யப்பட்டார்.

அவரை போலீசார் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்து வந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவரது பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News