இருவர் உறவு சம்மதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு உறவு முறிந்தபின் தகராறு எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடுக்க இயலாது- நீதிமன்றம்
- இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?.
- தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை.
பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டபின் திருமணம் செய்ய மறுப்பதாக திண்டுக்கல்லை சேர்ந்த பெண் அளித்த புகாரில் இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து அந்த இளைஞர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி "தனிப்பட்ட உறவு தகராறுகளில் குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளதை சரிபார்க்க வேண்டும். இருவர் உறவு சம்மதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு உறவு முறிந்த பின் தகராறு எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடக்க இயலாது.
தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சமகாலத்தில் சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் மாறிவரும் வரையறையை ஒப்புக்கொள்வதற்காக கருத்து முன்வைக்கப்படுகிறது.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ, தனிப்பட்ட ஏமாற்றத்தை குற்றவியல் செயல்முறை வழக்காகவோ மாற்ற முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல், இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.
இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?. தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க தனிமனிதருக்கு எதிராக வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம்." என கருத்து தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் தெளிவாகி உள்ளதால் இளைஞர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.