தமிழ்நாடு செய்திகள்
null

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி? - பரபரப்பு தகவல்கள்

Published On 2025-06-17 10:06 IST   |   Update On 2025-06-17 10:19:00 IST
  • திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ்.
  • ஏ.டி.ஜி.பி.யை சந்திக்க மகேஸ்வரி உதவி இருக்கிறார்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.

மதுரையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வருசநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தபோது வனராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் கொடைக்கானலில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது. தன்னை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என அறிமுகம் செய்து கொண்டு கருங்காலி மாலைகளையும் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனால் பல அதிகாரிகள், வி.ஐ.பி.க்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அரசியல் புரோக்கராக செயல்படத் தொடங்கினார். இவருக்கும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளுக்கு ஆலோசனை பெற்று வந்துள்ளார். அதன் பேரிலேயே தேனியைச் சேர்ந்த வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மகேஸ்வரியை அணுகியுள்ளார். தற்போது 17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் மகேஸ்வரி கைது செய்யப்பட்டு திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வருசநாடு அடுத்துள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை வந்து குறிகேட்டு செல்வது வழக்கம். இங்குள்ள பூசாரி கார்மேகத்துக்கு இதன் மூலம் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. கார்மேகத்தின் நெருங்கிய நண்பராக வனராஜ் இருந்துள்ளார்.

இதனால் தனது மகள் கடத்தப்பட்ட விபரம் அறிந்ததும் அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து கார்மேகம் பூசாரியிடம் கேட்டுள்ளார். அதன் பின் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி ஜெயராமன் மூலம் மீட்க உதவி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது வனராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் மேலும் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதனால் கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் திருமணம் செய்த விஜயஸ்ரீ தற்போது நடக்கும் பிரச்சினையை பார்த்து அதிர்ச்சியடைந்து இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் தனது காதலை பெற்றோரிடம் அவர் தெரிவித்தபோது சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறியதும், எப்படியாவது அவரை அழைத்து வர வேண்டும் எனவும் நினைத்துள்ளனர். ஆனால் தனது நிலைப்பாட்டில் விஜயஸ்ரீ மற்றும் அவரது காதல் கணவர் தனுஷ் உறுதியாக உள்ளதால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். தனது தந்தை வனராஜ் மூலம்தான் இத்தனை பிரச்சினை உள்ளது என்றும், தங்களை நிம்மதியாக வாழ விடுமாறும் உறவினர்களுக்கு செல்போனில் விஜயஸ்ரீ உருக்கமாக பேசியுள்ளார்.

Tags:    

Similar News