பக்ரீத் பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
- நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வார சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்க ப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிகொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக இன்று காலையில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை வார சந்தையான இன்று அதிகாலை 3மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்ப்பதற்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 30ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.