தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை- 23 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

Published On 2025-08-14 13:58 IST   |   Update On 2025-08-14 13:58:00 IST
  • மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
  • இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடித்து சென்றனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்கள் நீதிபதி உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 7 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் (இலங்கை மதிப்பு) அபராதத்துடன் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இதேபோல் கடந்த ஆண்டு எல்லைதாண்டி வந்ததாக கூறி கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களின் கைரேகை ஒத்துப்போகவில்லை எனக்கூறி மீனவர்கள் காவலை நீட்டிப்பு செய்து வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News